போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து வாரியம் (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டு உபகரணங்கள் நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஓட்டுநர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு உபகரணங்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் SLTB மற்றும் தனியார் துறை இரண்டிலிருந்தும் 40 பேருந்துகளில் நிறுவப்படும். இதன் பிறகு, அதை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வோம்.
CCTV கேமராக்களை மனிதர்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும், அவர்கள் வேலையில் தூங்கிவிடக்கூடும். இதனால் ஓட்டுநர்களை கண்காணிக்கத் தவறிவிடுவார்கள் என்பதால் அமைச்சகம் AI கட்டுப்பாட்டு உபகரணங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இலங்கையின் போக்குவரத்து அமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவை என்பதை ஒப்புக்கொள்கின்றேன். போக்குவரத்துப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தில் அமைச்சகம் கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பாக 85 அம்ச முன்மொழிவு உருவாக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை ( 01) முதல் செயல்படுத்தப்படும்.- என்றார்.