கடலோர ரயில் சேவையில் பாதிப்பு?

கடலோர ரயில் மார்க்க சேவைகள் இன்று (06) நண்பகல் 12 மணி முதல் தடைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடலோர ரயில் மார்க்கத்தில் உள்ள பழுதடைந்த சமிக்ஞை முறைக்கு தீர்வு காணக் கோரி, லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியாளர்கள் சங்கம் இன்று (06) நண்பகல் 12 மணி முதல் கடலோர ரயில் மார்க்க சேவையில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த பிரச்சினை தொடர்பாக இன்று காலை ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நேர்மறையான பதில் கிடைக்காவிட்டால், மேற்கண்ட முடிவை செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (5) காலை கடலோர ரயில் மார்க்கத்தில் பாணந்துறை மற்றும் எகொடஉயன ரயில் நிலையங்களுக்கு இடையில் சேதமடைந்த ரயில் தண்டவாளத்தைக் கண்ட உள்ளூர்வாசி ஒருவர், அந்த நேரத்தில் கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுத்து, பெரிய சேதம் ஏற்படாமல் தடுத்தார். 

இருப்பினும், சாகரிகா ரயில் நிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், சமிக்ஞை கோளாறு காரணமாக மற்றொரு ரயில் அதே வீதியில் மருதானை நோக்கி வந்துள்ளது. 

இது தொடர்பில் லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் கருத்து தெரிவிக்கையில்,

கடலோர மார்க்கத்தில் வண்ண விளக்கு சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கடுமையான குறைபாட்டால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறியது. 

குறித்த சமிக்ஞை குறைபாட்டிற்கான தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று சங்கம் எழுத்துப்பூர்வமாக ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தது. 

அதன்படி, இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால், பயணிகளின் பாதுகாப்பிற்காக கடலோர மார்க்கத்தில் ரயில் சேவையில இருந்து விலக நேரிடும் என அந்த சங்கம் நேற்று மேலும் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *