பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்றை சந்தையில் தேடாமல் மனங்களில் தேடுங்கள்- ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு..!

பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளைக் கைவிடவேண்டும் என்று உளமார விரும்பி, உறுதியாகத் தீர்மானித்தால் மாற்று தானாக வரும் என்று தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நேற்றையதினம் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தின் இந்த ஆண்டின் “பிளாஸ்ரிக் மாசுபாட்டை இல்லாதொழிப்போம்” என்ற கருப்பொருளுக்கு அமைவாக கல்லூரி அதிபர் சுமதி கந்தசாமி  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மனிதன் சூழலில் குவித்து வருகின்ற கழிவுகளில் இயற்கைக்கும் மனித உடல்நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்ற கழிவுகளில் பிளாஸ்ரிக் கழிவுகள்தான் முதலிடத்தில் உள்ளன.

மண்ணோடு மண்ணாக மக்கிப்போகாத இவை சூழலில் பன்னெடுங்காலம் நீடித்து இருக்கக்கூடியவை. நுண்துகள்களாக உணவுடனும் நீருடனும் சிறுகச்சிறுக எமது உடலினுள் நுழைந்து தேங்கி வருகின்றது.

இவற்றை எரிக்கும்போது டையொக்சின் என்னும் நச்சுவாயு வெளியேறுகிறது. இந்த நஞ்சுமனிதர்களில் புற்றுநோய்களையும் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தக்கூடியது.

பிளாஸ்ரிக்கை முற்றாகத் தவிர்க்க முடியாமற்போனாலும் பிளாஸ்ரிக் பைகளையும் ஒரு நாள் பாவித்துவிட்டு வீசுகின்ற பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்ட குவளைகள், தட்டுகள், உணவைப் பொதி செய்யும் பெட்டிகள் போன்றவைகளையும் நாங்கள் முற்றாகவே கைவிடலாம்.

சூழலில் குவியும் திண்மக் கழிவுகளில் இவற்றின் பங்குதான் மிக அதிகமாக உள்ளது. இவற்றுக்கான மாற்றாகக் கடதாசிப்பைகளையும் துணிப்பைகளையும் பயன்படுத்தலாம். பிளாஸ்ரிக்கை கை பயன்பாட்டுக்கு பயன்பாட்டுக்கு வரும்வரைக்கும் வரும்வரைக்கும் நாங்கள் எல்லோரும் இவற்றைத்தானே பயன்படுத்தினோம்.

கடதாசிப்பைகளையும் துணிப்பைகளையும் பாவிப்பதை இன்றைய தலைமுறை நாகரிகக் குறைவானதாகவும் அவமானகரமானதாகவும் ருதுகின்றது. இது எங்கள் மனதில் உள்ள பிரச்சினை. உண்மையில் இயற்கைக்கு இசைவான சூழல் நட்பு மிக்க பொருட்களைப் பயன்படுத்துபவர்களே நாகரிகமானவர்கள். நற்பண்புகளைக் கொண்டவர்கள். அந்த வகையில் பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்றை சந்தையில் தேடாமல் முதலில் எமது மனங்களில் மாற்றங்களைத் தேடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாணவிகளிடையே சூழல் தொடர்பான வினா விடைப் போட்டி நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *