இலங்கையின் புகழ்பூத்த அம்மன் ஆலயமாகவும் இலங்கையில் அதிகளவான பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினையும் கொண்ட மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் நவதள ராஜ கோபுரத்திற்கான மகா கும்பாபிஷேக குடமுழுக்கு இன்று(08) காலை நடைபெற்றது.
புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கிரியைகள் கடந்த 04ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமானது.
பிரதமகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் கும்பாபிஷேக கிரியைகள் நடாத்தப்பட்டன.
நேற்று முன்தினம் 06 ஆம் திகதியும் நேற்று சனிக்கிழமையும் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றதுடன் இரு தினங்களும் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி நவகுண்ட யாகம் மற்றும் பிரதான கும்பத்திற்கான விசேட பூஜைகள் நடைபெற்று, கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு 09 தளங்களையும் 121 அடி உயரத்தினையும் கொண்ட நவதள இராஜகோபுரத்திற்கு உலங்குவானூர்த்தியில் பூமழைபொலிய பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.
இன்றைய கும்பாபிஷேக நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








