மன்னார் நகர் பகுதியில் உள்ள பாடசாலைகள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற எழுத்து மூல முறைப்படுகளை தொடர்ந்து மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் அவர்களின் ஆலோசனையின் பெயரில் தலைமை பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் இன்று (9) இடம்பெற்ற ஆய்வு நடவடிக்கையின் போது பாடசாலை ஒன்றில் காணப்பட்ட பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்தும் மலசலகூடங்கள் உரிய முறையில் சுத்தம் பேனப்படாமை,பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் மலசலகூடங்கள்,சுகாதாரமற்ற முறையில் சிற்றுண்டி சாலையில் கையாளப்படும் உணவு பொருட்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு தயாரிக்கும் பகுதி பொருத்தமான முறையில் பராமரிக்கப்படாமை,சுத்தமின்றி காணப்படுகின்றமை,கழிவுநீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை,டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுச்சூழல் காணப்படுகின்றமை,ஆசிரியர் விடுதி துப்பறவின்மை,பாடசாலை வளாகத்தில் கழுதை,நாய் போன்ற மிருக நடமாட்டம்,பொலித்தீன் மற்றும் ஏனைய குப்பைகள் ஒழுங்கான முறையில் அகற்றப்படாமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன .
அதே நேரம் பாடசாலை சூழலில் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய வகையிலான பொருட்கள்,உலோகங்கள்,கட்டிடங்கள்,மணல் திட்டுகள் என்பன அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றையும் அகற்றுவதற்கான பணிப்புறை மன்னார் பொது சுகாதார அதிகாரிகளினால் பாடசாலை நிர்வாகதினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பகுதி புணர் நிர்மாணம் செய்யப்படும் வரை பொது சுகாதார அதிகாரிகளால் மூடி வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் தொடர்ச்சியாக பாடசாலைகளின் சுகாதார குறைபாடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறும் நிலையில் மன்னாரில் உள்ள பாடசாலைகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்சியாக மன்னார் பொது வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.