மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை: இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளாராக இலங்கைத் தமிழரசுக் கட்சயைச் சேர்ந்த மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, உப தவிசாளராக அதே கட்சியைச் சேர்ந்த அலைப்போடி வசிகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குரிய தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவு வியாழக்கிழமை பிற்பகல் களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையார் தலைமையில் நடைபெற்றது.

 20 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில், இரு கட்சிகளுக்கிடையில் மேற்படி பதவிகளில் போட்டி நிலவியிருந்தது. 

இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பதவி நிலைய உறுப்பினர்களை தேர்வு செய்வது என உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தெரிவித்திருந்தனர்.

இதன் போது இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்று தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட மேகசுந்தரம் வினோராஜ் 10 வாக்குகளையும், சண்முகநாதன் கணேசநாதன் 09 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதுடன், 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதன் போது தவிசாளராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி தவிசாளருக்காக போட்டியிட்ட அலைப்போடி வசிகரன் 10 வாக்குகளையும், கிருஷ்ணபிள்ளை வதனகுமார்  09 வாக்குகளும், பெற்று ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில்  அலையப்போடி வசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குரிய தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகிய இருவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டு பிரதேச சபையை இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

பிரதேச சபையில் புதிய தலைவர் பிரதித் தலைவர் தெரிவு செய்யும் நிகழ்வைப் பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான க.பிரபு, ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் மற்றும் ஏனைய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *