மலேசியத் தூதுவரிடம் வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில் முதலீட்டாளர்களை அதில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பாதில் ஹிசாம் ஆடமிடம் வடக்கு மாகாண   ஆளுநர் நா.வேதநாயகன்  கோரிக்கை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மலேசியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை நேற்று வியாழக்கிழமை இரவு  யாழ். நகரிலுள்ள நோர்த் கேட் ஹோட்டலில் இரவு விருந்துடன் சந்தித்துக் கலந்துரையாடினார். 

யாழ்ப்பாணத்துக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகள் தொடர்பில் மலேசியத் தூதுவர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகளை அவதானிப்பது தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள், முதலீடுகளின் அவசியம் தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார். விவசாயம் மற்றும் கடலுணவு தொடர்பான வளங்கள் வடக்கில் நிறைந்துள்ளன எனவும் அவை பெறுமதிசேர் உற்பத்திப்பொருட்களாக ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் அரிது என்றும் ஆளுநர் தெரியப்படுத்தினார். எதிர்காலத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயங்களை நோக்கி மலேசிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பான தெளிவான வரைபடத்தைக்கோரிய தூதுவர், முதலீட்டாளர்களுக்கான அனுமதிகள், சலுகைகள் தொடர்பில் விரைவான நடைமுறைதேவை என்றும் குறிப்பிட்டார். ஏனைய சில நாடுகளில் உள்ள விரைவு நடைமுறைகள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், சுற்றுலாத்துறைக்கான பல இடங்கள், வளங்கள் உள்ளபோதும் அவை உரிய வகையில் வெளிநாட்டுச் சுற்றுலாவிகளைச் சென்றடையத்தக்க மூலோபாயம் உருவாக்கப்படுவது எதிர்காலத்தில் அதிகளவு சுற்றுலாவிகளை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்க்கும் எனக் குறிப்பிட்ட தூதுவர், இது தொடர்பில் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

மலேசியத் தூதுவர் புகையிரதம் ஊடாகவே யாழ்ப்பாணத்துக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டியதுடன், சுற்றுலாத்துறை மேம்பாட்டின்போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயண நேரத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும் என்ற ஆலோசனையையும் ஆளுநரிடம் முன்வைத்தார். 

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எந்திரி சு.ராஜேந்திரா, ஆளுநரின் ஊடகச் செயலாளர் கு.டிலீப்அமுதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *