ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் மாத்திரமே தமிழ் சிங்கள முஸ்லிம் என அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து இவ்வாறான சத்திய பிரமாண நிகழ்வுகளை நடத்துவது இன நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று (14)பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தலைமையில் சத்திய பிரமாண நிகழ்வை திருகோணமலை சர்வதோய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட 36 உறுப்பினர்கள் இன்று சட்டத்தரணி எஸ். சஸ்னி அஹமட் முன்னிலையில் சத்தியபிரமாணத்தை மேற்கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச சபைகளிலும், கிண்ணியா நகர சபை மற்றும் திருகோணமலை மாநகர சபையையும் சேர்ந்த 36 உறுப்பினர்கள் இன்று சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்விற்கு கிண்ணியா நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ் எச் எம்.நளிம், சேருவிலை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ரண சிங்க பண்டார உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையானது சிக்கலான அமைப்பை கொண்டது.
வெற்றி பெற்றவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்ற முடியவில்லை எதிர்க்கட்சி உள்ளவர்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றனர்.
இவ்வாறான ஒரு தேர்தல் முறையை அரசாங்கம் இல்லாமல் செய்து உள்ளூராட்சி தேர்தலை நடத்தி இருக்க முடியும்.
இருந்த போதும் அதனை செய்யாது தேர்தலை நடத்தியதன் மூலம் இவ்வாறான நிகழ்வு நடைபெற்று வருகின்றன.
மேலும் உள்ளூராட்சி சபையில் கடந்த காலம் ஊழல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.
எனவே சிறந்த சபையாக நடத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக எமது ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.