அனர்த்தம் வரும்வரை காத்திருக்காமல் அதற்கு முன்னர் தீர்வு தாருங்கள்; மூதூர் மத்திய கல்லூரியில் அமைதிவழி போராட்டம்

 

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு இன்று பாடசாலைக்கு முன்பாக அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இவ் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

அமைதிவழி கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் நாங்கள் கல்வி கற்க பாதுகாப்பான சூழலை உறுதி செய்யுங்கள், இடைநிறுத்தப்பட்ட கட்டடத்தை மீளத்தாருங்கள். அரசே இடைநிறுத்தப்பட்ட வகுப்பறை கட்டடத்தை உடனடியாக ஆரம்பி, அனர்த்தம் வரும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னர் தீர்வு தாருங்கள் உள்ளிட்ட வாசகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் மத்திய கல்லூரியில் காணப்படும் ஒரு கட்டடம் கடந்த வாரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இன்னும் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக 14 வகுப்பு மாணவர்கள் மர நிழலில் இருந்து கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் முன்னைய அரசாங்கத்தால் மூதூர் மத்திய கல்லூரி புதிய கட்டடத்திற்காக 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய அரசாங்கத்தால் இவ் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு இவ் அரசாங்கம் புதிய கட்டடத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு கவனயீர்ப்பு நிறைவடைந்த பின்னர் அவ்விடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன, மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதோடு கட்டட நிலமைகளையும் பார்வையிட்டார்.

மூதூர் வலயக் கல்வி அலுவலக தொழில்நுட்ப அதிகாரிகளும் இவர்களோடு பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –

கடந்த அரசாங்கத்தால் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடிதம் மாத்திரமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே தவிர நிதி ஒதுக்கப்படவில்லை.இதே போன்று பல சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது.

நாளை பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களோடு பேசுவேன் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *