ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது!

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது.

ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முகம்மது ஹனிபா முகம்மது பைறூஸ் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இன்று இணைந்து கொண்ட நிலையில் அவர் தவிசாளராக தெரிவானார்.

பிரதி தவிசாளாராக அப்துல் கமீது நுபைர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச சபை மண்டபத்தில் இன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல் முகமட் அஸ்மி முன்னிலையில் சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு  பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி – 08, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 06, தேசிய மக்கள் சக்தி – 02 , என உறுப்பினர்களை கொண்டுள்ளன.

இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழு என்பன தலா ஒரு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.

இதன்போது இன்றைய தவிசாளர் தெரிவிற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக   முஹம்மட் ஹனிபா முகமட் பைறூஸ் என்பவரது பெயரும் ஜக்கிய மக்கள் சக்தி சார்பாக முகமது மீரா சாகீப் முகம்மது கலால்தீன் என்பரது பெயரும் மும்மொழியப்பட்டது

இந் நிலையில் 09ற்கு 08 என்ற ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முஹம்மட் ஹனிபா முகமட் பைறூஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு இலங்கை தமிழரசு கட்சி,சுயேட்சை ஆகியனவும் ஆதரவு வழங்கியிருந்தன.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை.இதே அடிப்படையில் பிரதி தவிசாளராக அப்துல் கமீது நுபைர் தெரிவு செய்யப்பட்டார்.

இன்றைய அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கிஸ்புல்லா மற்றும் ஏறாவூர் நகரசபை புதிய தவிசாளர் எம்.எஸ்.எம்.நளீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்

இதேவேளை சபை அமர்வின் பின்னர் கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில்; வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பான நிலையில்  சபை வளாகத்தில் அமைதியற்ற சூழ் நிலை காணப்பட்டது. பொலிசார் அமைதியை ஏற்படுத்தும் வகையில கடமையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *