கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம், இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஆயுள்வேத திணைக்களம் ஆகியவை ஒன்றிணைந்து சர்வதேச யோகா தினத்தினை குறிக்கும் முகமாக 2025 ஜூன் 19ஆம் திகதி காலை 08.30 மணி முதல் 09.30 மணி வரையில் நாடளாவிய ரீதியிலான யோகா நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தன.
வரலாற்று ரீதியில் முதல் தடவையாக இவ்வாறு நடைபெற்றிருக்கும் சர்வதேச யோகா தின நிகழ்வின்போது சம நேரத்தில் இலங்கையின் 9 மாகாணங்களிலும் உள்ள 113 ஆயுள்வேத மருத்துவமனைகள், நான்கு பல்கலைக்கழகங்கள் மற்றும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இணைந்திருந்தன.
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற இந்நிகழ்வுகளுக்கு மேலதிகமாக 11 ஆவது சர்வதேச யோகா தினத்தினை குறிக்கும் பிரதான நிகழ்வுகள் 2025 ஜூன் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:30 மணி முதல் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.