புத்தளம் பிரதேசசபையின் தலைவராக சுயேட்சைக்குழு உறுப்பினர் தெரிவு!

புத்தளம் பிரதேச சபையின்  தலைவராக சுயேட்சைக் குழு  1ம் இலக்கத்தில் போட்டியிட்டு போனஸ் ஆசனம் மூலம் சபைக்குத் தெரிவான ரதிக சஞ்சீவ  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதேச சபையின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.என்.எம்.சஞ்சீவனி ஹேரத் தலைமையில் இன்று (20)  இடம்பெற்றது.

இதன்போது, இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதையடுத்து தலைவர் தெரிவுக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் அகில விராஜ் சம்பத் , ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இனோக் துஷார பத்திரகே மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர் ரதிக சஞ்சீவ ஆகிய மூவரின் பெயர்கள் சபையில் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது.

வாக்களிப்பில் 25 உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மூன்று உறுப்பினர்களுக்கும் பெரும்பான்மை வாக்கு கிடைக்காததால் இரண்டாவது சுற்றில் வாக்களிப்பு நடத்தப்பட்டது. 

இறுதி வாக்களிப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சுயேட்சைக் குழு உறுப்பினரான ரதிக சஞ்சீவ புத்தளம் பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *