முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபா தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (20) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்பாவல கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பி.வி. லக்ஷ்மன் ஜெயவர்தன இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்வைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கோரிக்கையின் பேரில், சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் ஒரு மாநாட்டு மண்டபத்தைக் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
2019 ஜனவரியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் வளாகத்தில் இருந்த பல கடைகள் – அவற்றின் கதவுகள், ஜன்னல்கள், கூரைத் தாள்கள் மற்றும் இருக்கைகள் – அகற்றப்பட்டன.
இந்தத் திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு 130 மில்லியன் ரூபா என்றாலும், இது ஆரம்பத்தில் 73 மில்லியன் ரூபா மற்றும் இலங்கை இராணுவத்தின் உழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 27.5 மில்லியன் ரூபா இறுதியில் விடுவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் முழுமையடையாமல் உள்ளது.
இந்தத் திட்டத்தில் பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிறுத்தப்பட்ட கட்டுமானம் மற்றும் காணாமல் போன சொத்துக்கள் இரண்டையும் உடனடியாக நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரிக்க வேண்டும். – என்றுள்ளது.