நண்பனை மண்வெட்டியால் தாக்கிவிட்டு பொலிஸில் சரணடைந்த நபர்; குடும்பஸ்தர் உயிரிழப்பு

நண்பரால் மண்வெட்டியால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் என்ற 56 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் அனிச்சயன் குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார். 

இவர் பணிக்கு செல்வதற்கு முன்னர் கடந்த 10ஆம் திகதி இரவு 7 மணியளவில் தனக்கும் தனது இரண்டு நண்பர்களுக்கும் உணவு வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். 

மூவரும் உணவருந்திய பின்னர் குறித்த நபருக்கும் அவரது நண்பர்களில் ஒருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவரது நண்பர் மண்வெட்டியால் தாக்கிவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

சரணடைந்தவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற நட்டாங்கண்டல் பொலிஸார் இரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து இருந்த குறித்த நபரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அதன்பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று இறுதியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அவர் உயிரிழந்தார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *