தர்மபுரம்  பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்!

தர்மபுரம்  பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட  அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரம்  வைத்தியசாலைக்கு இவ்வாறு  திடீர் விஜயம் மேற்கொண்டனர்.
இதன் போது, குறித்த வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், வைத்திய சாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
தர்மபுரம் வைத்திய சாலையில் ஒரே ஒரு வைத்தியரே தற்பொழுது கடமை ஆற்றி வருகின்றார். இங்கு நாளாந்தம் 300க்கு அதிகமான வெளி நோயாளர்கள் வருகை தருவதாகவும் அவர்களுக்கான சிகிச்சையை பார்வையிடுவது மட்டுமின்றி வாராந்த சிகிச்சை  அவசர தேவை கருதி வரும் நோயாளர்களையும் பார்வையிட வேண்டிய தேவை உள்ளது.
இதன் காரணமாக தொடர்ச்சியாக 24 மணி நேரமும் தாம் கடமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.
மேலும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், இங்கு போதிய அளவிலான கட்டடங்கள் மற்றும் கட்டில் வசதிகள் அனைத்தும் காணப்பட்டிருந்த போதிலும் இங்கு போதிய வைத்தியர் பற்றாக்குறை காரணமாகவும் மற்றும் குருதி பரிசோதனை இல்லாத காரணத்தினால்  இங்கிருந்து பல நோயாளர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தர்மபுரம் வைத்தியசாலையில் போதிய அளவிலான இட வசதிகள் காணப்பட்ட போதிலும் கிளிநொச்சி வைத்தியசாலையே நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விடயம் தொடர்பாக அதிக அளவு அக்கறை செலுத்தும் என்ற நம்பிக்கையில் எமது தேவையை பூர்த்தி செய்து மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இவ்விடயம்தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் தெரிவிக்கையில் வைத்தியசாலை நிர்வாகமும் மற்றும் வைத்தியர்கள் தெரிவித்த விடயங்கள் தொடர்பாக பூர்த்தி செய்ய வேண்டிய அனைத்து விடயங்களும் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை,  வைத்தியசாலை பாதுகாப்புக்கான வசதிகள்,  குருதி பரிசோதனை வசதிகள் என்பனவற்றை விரைவில் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இலகுவான முறையில் சிறந்த வைத்திய சேவையினை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதின் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் காணப்படுகின்ற அதிகளவான நோயாளர்களின் நெரிசல்களை குறைக்க முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *