மலையக மக்களின் காணி பிரச்சினை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு!

மலையக  மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண யாழ்ப்பாண பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியம்  முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக  மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாக இருக்கின்றது. நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக மலையக மக்கள் இருப்பதோடு எங்கள் உறவுகளின் தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்ட இருளாகவே காணப்படுகின்றது.

அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய மலையக மக்களின் வழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

உண்மையிலேயே இது நீதியானதா?; இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பனிகளும் அதற்கான முற்றுமுழுதான முனைப்போடு தொழிற்சங்கங்களும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குறியான விடயமாகும்.

மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம்  மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழ வைக்கப்படுகின்றனர்.

மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினமாக “காணி தினம்”; இருக்கின்றது. இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை இன்று 21ம் திகதி சனிக்கிழமை அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு  ‘நிலமற்றோர்க்கு நிலம்’ எனும் தொணிப்பொருளில் “மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம்” ஏற்பாடுகளை செய்து வருவதாக அறியப்படுகிறது.

மலையக   மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில் தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடயமாகும். நீண்ட காலமாக மக்களின் தேவையாகவும் மக்களின் நிலம் சார்ந்த இருப்பியலை தக்க வைத்து கொள்வதற்கு இவ்விடயத்தில் முன்னேடுப்புக்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியம் இனிமேல் சிறிதும் பின் நிற்காது முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம். – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *