நாடளாவிய ரீதியில் கிராம வீதி அபிவிருத்திகள் ஆரம்பம்!

கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்று(21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக நேற்று நாடாளாவிய ரீதியில் 57 கிராமப்புற வீதிகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை புனரமைக்கும் வேலை திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீதியின் ஆரம்பகட்ட பணிகளை முன்னெடுக்கும் வகையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாத செயற்திட்டமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த வீதியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அரசாங்கத்தினால் 35 மில்லியன் ரூபாசெலவில் குறித்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ஏழாம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள வீதியை புனரமைக்கும் பணிகளும் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை மூன்றாம் குறுக்கு வீதி மற்றும் தெல்லிப்பழை நடேஸ்வரா கல்லூரி வீதியின் புனரமைப்பு பணிகளும் நேற்று ஆரம்பிக்கப்பட்டன..

இதனிடையே வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இருந்து பெரியார்குளம் முருகன் ஆலயம் வரையான ஆயிரத்து 200மீற்றர் நீளம் கொண்ட வீதியை செப்பன் இடும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

சுமார்11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் வீதி புனரமைப்பு பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.

அத்துடன் ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட ஹட்டன் பள்ளிவாசல் அருகில் இருந்து ஹட்டன் டிப்போ ஊடாக காமனிபுர வீதியை செப்பனிடும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *