நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – செம்மணி புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு தடையற்ற அனுமதி

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் நாளை (23) இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஜூன் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி, பிரதமர் வெளியுறவு அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனித உரிமைகள் ஆணையாளர் கண்டிக்குச் சென்று அங்கு புனித தந்ததாதுவை வணங்கவுள்ளதுடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதான பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார்.

அதுமாத்திரமின்றி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் பயணம் மேற்கொள்வார் எனவும் அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் செம்மணி மனிதபுதைகுழியை பார்வையிடுவதற்கு தடையற்ற அனுமதி  வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த கால மனித உரிமை மீறல்களை கையாள்வது குறித்த-நாட்டின் நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால் மனித உரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களிற்கும் செல்வதற்கும் எந்த தடையையும் விதிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *