தமது கொள்கை பிரகடனத்தில் பொது மன்னிப்பு என்ற விடயத்தை இரத்து செய்வதாக உறுதியளித்த அரசாங்கம் இதுவரையில் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தவறான முறையில் பொது மன்னிப்பு வழங்கப்படுவது குறித்து நாட்டில் பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் இந்த பொது மன்னிப்பு என்ற விடயத்தையே நீக்குவதாகவே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தற்போது ஜனாதிபதியின் பெயரில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் நான் இது தொடர்பில் கேள்வியெழுப்பிய பின்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சட்ட விரோதமாக விடுதலை செய்யப்பட்டவர்களும், அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும்.என்றார்.