தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட :தேசியத்திற்குள் இருக்கவுள்ளோர் யார் – ஆறு திருமுருகன் கேள்வி!

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் இன்று (24)  நடைபெற்ற நிலையில்,

ஆறு திருமுருகன் இந் நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார்.

அவ்வுரையில் , இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம்  ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும்  மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர்  பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே பிறந்த நாங்கள் ஏன் சுதேசியத்தைப் பாதுகாக்கக்கூடாது, அதைப்பற்றி பேசக் கூடாது என்று அன்றே அடியெடுத்துக்கொடுத்தவர்.

அதனாலேயே அவரது சிலையின் பெயர்ப்பலகையில் சுதேசியக் கவிஞன் என்ற பதம் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 55000 குடும்பம் இருந்த காரைநகரில் தற்போது 5000 குடும்பங்களே உள்ளது.  மலையகத் தமிழர்கள் கஸ்டப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேற   மறுக்கின்றனர்.

அவர்களுடன் பேசிய போது 1977 ம் ஆண்டிலே  கிளிநொச்சியிலே எமது பிள்ளைகள் போராட்டத்தில் பங்குபற்றி பலர் இறந்து விட்டார்களெனவும்  இன்றும்  தாம் நிர்க்கதியாக வாழ்வதாகவும்  தெரிவித்தனர்.

இதைவிட மலையகத்  தமிழர்கள் இலங்கைக்கு அடிமையாக வந்து 200 வருடங்கள் கொண்டாடப்படுகின்றது. 

10 இலட்சம் தமிழர்களை  ஸ்ரீமா -சாஸ்திரி  ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு அனுப்பிய போது யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் உண்ணாவிரதம் செய்தார்கள், ஆர்ப்பாட்டம் செய்தார்கள், தாங்கள் நிலம் தருகின்றோம் வாருங்கள் என மறித்தனர்.

ஆனால் தலைமன்னாரிலே கூடாரங்களை விரித்து விட்டு இராமானுயம் கப்பலில் அனுப்பும் போது எங்கே உங்கள் தமிழ் உணர்வு  என்று கேட்கின்றனர்.

பாவமும் பழியும் நாங்கள் தேடியதால் இன்று எம் இனம் வற்றிக்கொண்டு போகின்றது.  உயர்தரப் பிரிவு கற்கும் எதிர்காலச் சந்ததியிடம் இலட்சியம் பற்றி வினாவினால் ஒரு தடவை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி  பெறுபேறு சாதகமாக அமைந்தால் பல்கலைக்கழகம்; இல்லையாயின்  வெளிநாடு என்பதே இன்று வாய்ப்பாடாகக் காணப்படுகின்றது.

நிறைய மேல்வீடுகள் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்தாலும்  மேல்வீட்டிலும் கீழ்வீட்டிலும் யாருமற்ற நிலையில் பூட்டிவிட்டு சாவியை எடுத்துச்  செல்கின்றனர்.

எனவே தான் அரசியல்வாதிகளோ சான்றோர்களோ இதற்கு அடுத்த கட்டப் பரிகாரம் என்ன என்பது பற்றி  நாளும் பொழுதும் பிரசாரம் செய்து பாதுகாக்க வேண்டும்.

நாங்கள் தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட தேசியத்திற்குள் இருக்கவுள்ளோர் யார் ? அவர்களை எப்படி அதிகரிக்கலாம் ?  என்பதைப்பற்றிச் சிந்தித்து அதனைச் சிந்திக்கின்ற சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *