ஜூன் 13 முதல் இஸ்ரேல் ஈரானின் இராணுவ உள்கட்டமைப்பில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளைத் துளைத்துள்ளன.
மேலும், அமெரிக்கா தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பின்னர் திங்கட்கிழமை தொடங்கி அடுத்த 24 மணி நேர நிகழ்வுகள் இன்னும் வேகமாக நகர்ந்தன:
குறிப்பாக ஒரு அமெரிக்க விமானப்படை தளம் தாக்குதலுக்கு உள்ளானது, வெள்ளை மாளிகை ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு போர்நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்தது, அந்த ஒப்பந்தம் முறியும் தருவாயிலும் இருந்தது.
இப்படித்தான் அந்த நிலையற்ற 24 மணி நேரம் ஓடியது.
வளைகுடாவுக்கு அமைதியான எச்சரிக்கை
(07:00 வொஷிங்டன் டிசி/ 12:00 லண்டன் / 14:00 டெல் அவிப் / 14:30 தெஹ்ரான்)
மத்திய கிழக்கை வாட்டி வதைக்கும் மோதல் வளைகுடாவிற்கும் பரவப் போகிறது என்பதற்கான முதல் அறிகுறியாக கட்டாரில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமைதியான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சிறிது நேரத்திலேயே இங்கிலாந்தும் இதேபோன்ற ஆலோசனையை வெளியிட்டது.
ஈரான் கட்டாரில் உள்ள அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் என்பது எப்போதும் சாத்தியமே. தலைநகர் தோஹாவிற்கு வெளியே உள்ள ஒரு பரந்த நிறுவலான அல்-உதெய்த் இராணுவத் தளம் இந்த நாட்டில் உள்ளது.
இது ஆயிரக்கணக்கான படையினரை கொண்டுள்ளது மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க விமான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்ட இடமாகும்.
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது வார இறுதியில் அமெரிக்கா நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெஹ்ரானில் உள்ள தலைவர்கள் அச்சுறுத்தியிருந்தனர்.
அவற்றில் மலையின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் அதன் மதிப்புமிக்க ஃபோர்டோ செறிவூட்டல் தளமும் அடங்கும்.
நம்பகமான அச்சுறுத்தல்
(12:00 வொஷிங்கடன் டிசி / 17:00 லண்டன் / 19:00 டெல் அவிவ்/ 19:30 தெஹ்ரான்)
கட்டாருக்கு மேலே உள்ள வான்வெளி மூடப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தோஹாவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அவசரமாக பயணிகள் விமானங்களைத் திருப்பி அனுப்பத் தொடங்கினர்.
மேலும், உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றிற்குச் செல்லும் விமானங்கள் வளைகுடாவின் வேறு இடங்களில் தரையிறங்கத் தொடங்கின.
பின்னர் அல்-உதெய்த் விமானத் தளத்திற்கு எதிரான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலிலிருந்து “நம்பகமான அச்சுறுத்தல்” பற்றி தெரியவந்தது.
ஏவுகணை ஏவுதளங்கள் கட்டாரை நோக்கிச் செல்வது காணப்பட்டதாக பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தும் அவரது மிக மூத்த ஜெனரலும் நிலைமையைக் கண்காணிக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.
ஒரு மணி நேரத்திற்குள், தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டன.
மேலும், அதன் ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்களுக்கு மேலே உள்ள வானம், ஈரானிய ஆயுதங்களை காற்றில் வேட்டையாடும்போது வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் நிறைந்திருந்தது.
அமெரிக்காவுக்கு முன்பாக கட்டாரின் எதிர்வினை
(13:00 வொஷிங்டன் டிசி / 18:00 லண்டன் / 20:00 டெல் அவிவ் / 20:30 தெஹ்ரான்)
ஈரானின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அதன் பழிவாங்கும் நடவடிக்கை நடந்து வருவதாக செய்தி வெளியிடத் தொடங்கின.
சிறிது நேரத்திலேயே, ஈரானின் புரட்சிகர காவலர்கள் அதை உறுதிப்படுத்தினர்.
“இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் பலங்கள் அல்ல பலவீனம் என்று அது கூறியது – ஆனால் தாக்குதல் விரைவில் முடிவுக்கு வந்தது.
அமெரிக்காவிற்கு முன்பாக கட்டார் எதிர்வினையாற்றியது.
இலக்கு அதன் மண்ணில் உள்ள அமெரிக்க தளமாக இருந்தாலும், அதன் இறையாண்மை “வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு” மூலம் மீறப்பட்டுள்ளது என்று அரசாங்கத்தின் ஆவேசமான அறிக்கையில் பிரசுரிக்கப்பட்டது.
முக்கியமாக, ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதை அது உறுதிப்படுத்தியது.
தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட சூதான நடவடிக்கையால் யாரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை.
அதே நேரத்தில், ஈரானிய உச்ச தலைவரின் எக்ஸ் கணக்கில் பதிவிட்ட ஒரு படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில் ஒரு அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்படுவதையும், ஒரு கிழிந்த அமெரிக்கக் கொடி எரிக்கப்படுவதையும் சித்தரித்தது.
எனினும், எந்த அழிவையும் அறிவிப்பதற்குப் பதிலாக, “நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை ” என்று பதிவிட்டார்.
திட்டமிடப்பட்ட ஈரானிய தாக்குதல் பற்றி அமெரிக்காவும் கத்தாரும் முன்கூட்டியே அறிந்திருந்ததாகத் தெரிகிறது.
அமைதிக்கான நேரம்
(16:00 வொஷிங்டன் டிசி / 21:00 லண்டன் / 23:00 டெல் அவிவ் / 23:30 தெஹ்ரான்)
பலவீனமானது, எதிர்பார்க்கப்பட்டது. திறம்பட எதிர்கொள்ளப்பட்டது.
ஆம், டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தாக்குதலை அப்படித்தான் விவரித்தார் – ஆனால் அவரது செய்தி தொடர்ந்தபோது, அமெரிக்க ஜனாதிபதியின் தொனி மிகவும் சமரசமாக இருந்தது.
தாக்குதல் பற்றி எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காக ஈரானுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், தாக்குதலின் போது கட்டார் தளத்தில் இருந்து அனைவரும், அனைத்தும் வெளியேற்றப்பட்டு விட்டன என்று கூறினார்.
மேலும், ஈரான் இப்போது ஒருவேளை பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு செல்ல முடியும், மேலும் இஸ்ரேலும் அதையே செய்ய நான் உற்சாகமாக ஊக்குவிப்பேன் என்றார்.
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, ஈரான் ஒரு அமெரிக்க விமான தளத்தைத் தாக்கியது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக முன்னோடியில்லாத தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த இரு சம்பவங்கள் கடந்த நாட்களில் தீயதாகவும் உலகிற்கு ஆபத்தானதாகவும் கருதப்பட்டது.
ஆனால், ட்ரம்பின் இத்தகையை கருத்துக்கள் மோதலின் ஒரு திருப்பு முனைக்கு வழிவகுத்தது.
இறுதியில் அவர் சமூக ஊடகத்த தளத்தில் “உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்!” என்று பதிவிட்டார்.
12 நாள் போர்
(18:00 வொஷிங்டன் டிசி / 23:00 லண்டன் / 01:00 டெல் அவிவ் / 01:30 தெஹ்ரான்)
அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய திரைக்குப் பின்னால் பரபரப்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததாகத் தெரிகிறது.
டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நேரடியாகப் பேசினார்.
இந்த அழைப்பு தனிப்பட்ட முறையில் நடந்தது.
ஆனால் அவர்களின் சந்திப்பின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது:
சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது என்பது சந்திப்பின் பேசு பொருள்.
இதற்கிடையில், ட்ரம்பின் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸும் அவரது தலைமை சர்வதேச பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப்பும் ஈரானியர்களை நேரடியாகவும், இராஜதந்திர பின்னணி வழிகள் வழியாகவும் தொடர்பு கொண்டிருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தைகளுடன் போர் நிறுத்தம் பற்றிய செய்திகள் சுழலத் தொடங்கின.
BST 11:00 மணிக்குப் பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் சமூக ஊடகங்களுக்குச் சென்றார்.
அவரது பதிவில் “அனைவருக்கும் வாழ்த்துக்கள்” – என்றார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழுமையான போர்நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று ஜனாதிபதி எழுதினார்.
எனினும் அது இறுதிப் பணிகளுக்காக செயற்பாட்டில் உள்ளதாகவும், ஆறு மணி நேரம் கழித்து அமலுக்கு வரும்.
இந்த மோதல் இனிமேல் “12 நாள் போர்” என்று அறியப்பட வேண்டும் என்று ட்ரம்ப் எழுதினார்.
ஏவுகணைகளின் இறுதிச் சுற்று
(22:00 வொஷிங்டன் டிசி / 03:00 லண்டன் / 05:00 டெல் அவிவ் / 05:30 தெஹ்ரான்)
இஸ்ரேல் முழுவதும், சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின, மக்கள் தங்குமிடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டனர்: ஈரானிய ஏவுகணைகள் வந்து கொண்டிருந்தன என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரித்தன.
60 நிமிடங்களுக்கும் குறைவான காலகட்டத்தில், ஈரான் மூன்று அலை ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் கூறியது.
நேரம் ஆக ஆக இன்னும் பல ஏவுகணைகள் வீசப்படும் என்று இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்தது.
பீர்ஷெபாவில், பல மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது நேரடித் தாக்குதல் நடந்தது.
நான்கு பேர் – அவர்களில் குறைந்தது மூன்று பேர் ஒரு பாதுகாப்பான அறையில் மறைந்திருந்தனர் – ஒரு ஏவுகணை அதைக் கிழித்ததில் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் பிரதமர், ஈரான் தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகப்பெரிய ஏவுகணைகளில் ஒன்றை வீடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
அதேநேரத்தில், இஸ்ரேல் இரவு முழுவதும் கடுமையான தாக்குதல்களை நடத்தியதாகவும், வடக்கு நகரமான அஸ்தானே-யே அஷ்ரஃபியேயில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணு விஞ்ஞானி மொஹமட் ரெசா செடிகி சபேரி அவர்களில் ஒருவர் என்று கூறியது.
பிராந்தியத்தின் துணை ஆளுநர் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் “முற்றிலும் அழிக்கப்பட்டன, மேலும் வெடிப்பு காரணமாக சுற்றியுள்ள பல வீடுகள் சேதமடைந்தன” என்று கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள், வீடுகளால் சூழப்பட்ட ஒரு தெருவில் சிதறிக் கிடந்த குப்பைகளைக் காட்டின.
போர் நிறுத்த காலக்கெடுவை மீறுவதற்காக இஸ்ரேல் “கடைசி சுற்று ஏவுகணைகளை” வீசியதாக ஈரான் குற்றம் சாட்டியது.
பின்னர் இஸ்ரேலிய இராணுவம் இரவு முழுவதும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக உறுதிப்படுத்தியது.
அதே நேரத்தில் ஈராக்கிய அரசாங்கம் ட்ரோன்கள் தங்கள் பிரதேசத்தில் உள்ள தளங்களை குறிவைத்ததாகக் கூறியது.
ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்கள் ஈராக்கில் செயல்படுகின்றன, ஆனால் எதை இலக்காகக் கொண்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனால், கடைசி தருணம் வரை சண்டை தொடர்ந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.
‘போர் நிறுத்தம் இப்போது அமுலில் உள்ளது’
(01:00 வொஷிங்டன் டிசி / 06:00 லண்டன் / 08:00 டெல் அவிவ் / 08:30 தெஹ்ரான்)
“போர் நிறுத்தம் இப்போது அமுலில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள்!” என்று சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப் போர் நிறுத்தத்தின் தொடக்கத்தை அறிவித்தார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர், இஸ்ரேலிய அரசாங்கம் போர் நிறுத்த ஏற்பாடுகளை முறையாக ஏற்றுக்கொண்டது.
ஈரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திறன்களை நீக்குவதற்கான அதன் போர் நோக்கங்களை இஸ்ரேல் அடைந்துவிட்டதாகவும், அதன் விளைவாக “உலக வல்லரசுகள்” மத்தியில் அதன் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் ஒரு அறிக்கை கூறியது.
ட்ரம்ப் முன்வைத்த போர் நிறுத்தத்திற்கு தெஹ்ரான் காத்திருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஏற்கனவே இரவோடு இரவாகக் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் நேரப்படி 04:00 மணிக்கு முன்பு இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தினால், “அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை” என்று அவர் கூறினார்.
ஆனால் அந்த போர் நிறுத்தம் ஆபத்தில் இருப்பது போல் தோன்ற அதிக நேரம் எடுக்காது.
ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டபோது வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மறுப்புகளை வெளியிட்டது, ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் “தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகள் மீது தீவிர தாக்குதல்களுக்கு” உத்தரவிட்டதாகக் கூறினார்.
ட்ரம்பின் விரைவாக இணைக்கப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் செயலிழந்து விடும் என்று தோன்றியது.
இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் ஈரானிய தலைநகருக்குச் செல்லும் வழியில், ட்ரம்ப் மீண்டும் பதிவிட்டார்: “அந்த குண்டுகளை வீச வேண்டாம். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய மீறல். உங்கள் விமானிகளை இப்போதே திருப்பி அழையுங்கள்!” என்றார்.
ட்ரம்பின் இறுதி அறிக்கை
(07:00 வொஷிங்டன் டிசி / 12:00 லண்டன் / 14:00 டெல் அவிவ் / 14:30 தெஹ்ரான்)
வொஷிங்டன் டி.சி.யில் காலை விடியும்போது, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையின் புல்வெளியில் கால் வைத்தார், அங்கு ஒரு ஹெலிகொப்டர் அவரை நேட்டோ உச்சிமாநாட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது.
அறிவிப்புகள், கூற்றுக்கள் மற்றும் மறுப்புகளின் மயக்கமான இரவிற்குப் பின்னர் அவர் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கேட்க ஆர்வமாக செய்தியாளர்களும் காத்திருந்தனர்.
இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை மீறியதாக ட்ரம்ப் அவர்களிடம் கூறினார் – ஆனால் ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
நெதன்யாகுவை பின்வாங்குமாறு அவர் வலியுறுத்திய இஸ்ரேலிய ஜெட் விமானங்களைக் குறிப்பிட்டு, அவர் கூறினார்.
இறுதியாக ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட அதே வேளையில், “நான் இதற்கு முன்பு பார்த்திராத” தாக்குதல்களை நடத்தியதற்காக “இஸ்ரேல் மீது நான் மகிழ்ச்சியடையவில்லை” என்றும் அவர் கூறினார்.
“ஈரான் தொடர்பிலும் நான் மகிழ்ச்சியடையவில்லை,” என்றும் அவர் மேலும் கூறினார்.