இந்திய விண்வெளி வீரர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த குழுவினருடன் புறப்பட்ட ஆக்ஸியம்-4 (Axiom-4) விண்கலத்தின் வெற்றிகரமான ஏவுதலை மகிழ்ச்சியான இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் பயணத்தை இயக்கும் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
26 மணி நேரத்திற்குள் – விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வந்து சேரும் போது – குரூப் கேப்டன் சுக்லா நாசாவின் சுற்றுப்பாதை ஆய்வகத்தைப் பார்வையிடும் முதல் இந்தியர் ஆவார்.
1984 ஆம் ஆண்டு ரஷ்ய சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது பயணம் வருகிறது.
புதன்கிழமை 02:31 EDT மணிக்கு (06:31 GMT; 12:01 இந்திய நேரம்) புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ரொக்கெட் மூலலமாக Ax-4 விண்ணில் ஏவப்பட்டது.
ஹூஸ்டனை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸால் இயக்கப்படும் வணிக விண்கலமான ஆக்ஸ்-4 இல் ஐ.எஸ்.எஸ். பயணம், நாசா, இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
அதன் நான்கு பேர் கொண்ட குழுவில் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோரும் அடங்குவர்.
புதன்கிழமை விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு விண்வெளி வீரர்கள் வாரக்கணக்கில் தனிமைப்படுத்தலில் கழித்தனர்.
இந்த பயணம் இந்தியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரூப் கேப்டன் சுக்லா தனது ஐ.எஸ்.எஸ் பயணத்தின் போது பெறும் அனுபவம் அதன் முயற்சிகளுக்கு பெரிதும் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2027 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட நாட்டின் முதல் மனித விண்வெளி விமானத்தில் பயணிக்க கடந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட நான்கு இந்திய விமானப்படை அதிகாரிகளில் 39 வயதான இவர் ஒருவர்.
2035 ஆம் ஆண்டுக்குள் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கவும், 2040 ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு ஒரு விண்வெளி வீரரை அனுப்பவும் இந்தியா இலட்சியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
விண்வெளிக்குச் செல்வதற்குத் தயாராக பல சோதனைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரோ, குரூப் கேப்டன் சுக்லாவுக்கு Ax-4 இல் இடம் மற்றும் அவரது பயிற்சியைப் பெற 5 பில்லியன் இந்திய ரூபாவை ($59 மில்லியன்; £43 மில்லியன்) செலுத்தியுள்ளது.