யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட மற்றும் யாழ்ப்பாண பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் கிராமிய வறுமையை இல்லாதொழித்தல், தூய்மையான இலங்கையை உருவாக்குதல் மற்றும் தரவுகளை கணனிமயப்படுத்தல் தொடர்பான நோக்கங்கள் தெளிவுப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் மீன்பிடி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைசார் விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர், திணைக்களத் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.