ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று மதியம் 03 மணியளவில் ஹட்டன் டிக்கோயா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, திறந்த வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் பெருமாள் சுரேந்திரன் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அழகமுத்து நந்தகுமார் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 08 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 08 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அழகமுத்து நந்தகுமார் 07 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பெருமாள் சுரேந்திரன் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக செல்லையா யோகேஸ்வரம் பெயர் முன்மொழியப்பட்டது.
இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பெருமாள் சுரேந்திரன் 08 வாக்குகளை பெற்று சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக செல்லையா யோகேஸ்வரம் 07 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
ஹட்டன் டிக்கோயா நகரசபை (15 உறுப்பினர்கள்)
• தேசிய மக்கள் சக்தி – 06
• ஐக்கிய மக்கள் சக்தி – 05
• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02
• சுயேட்சை குழு (01) – 01
• ஐக்கிய தேசியக் கட்சி – 01