யூலை 7 முதல் தினசரி சேவையாக நடைமுறைக்கு வரும் கடுகதி ரயில் சேவை!

இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு இன்று (26) கருத்து கூறுகையில் –

பொதுமக்களால் புகையிரத திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுவரைகாலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குறித்த புகையிரதம் தனது சேவையை முன்னெடுத்துவந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு தகது சேவையை முன்னெடுப்பதுடன் கொழும்பு கோட்டையிலிருந்து 5.45 யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிப்பதுடன் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மதியம்  11.49 வந்தடையவுள்ளது. அதன்பின்னர் காங்கேசன்துறையை 12.13 சென்றடையும். 

மீண்டும் மாலை 1.30 க்கு காங்கேசன்துறையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து 2.12 புறப்பட்டு கொழு்ம்பு கோட்டையை முன்னிரவு இரவு 8.33 சென்றடையும். அதேவேளை கல்கிசையை முன்னிரவு இரவு 8.55 சென்றடையும் ஒழுங்கில் சேவையை முன்னெடுக்கவுள்ளது.

இதேநேரம் குறித்த கடுகதி புகையிரத சேவைக்கான ஆசன முற்பதிவுகள் அடுத்த ஒருசில தினங்களில் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்த யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அத்தியட்சகர் அதனை புகையிரத திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்  

இதேவேளை இதுவரைகாலமும் 5.45 க்கு கொழு்ம்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட யாழ் தேவி புகையிரதமானது எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் காலை 6.35 மணிக்கு  தனது சேவையை ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *