யாழ் மாநகர சபையின் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள குப்பை மேடு தொடர்ச்சியாக எரியூட்டப்படுவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகின்றது என்று தெரிவித்து மாநகரசபைக்கு எதிராக வலி.மேற்கு பிரதேசசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கூட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் இடம்பெற்ற போது இந்த கண்டன தீர்மானம் எடுக்கப்பட்டது.
சபைக் கூட்டத்தில் தவிசாளர் தெரிவிக்கையில்,
கல்லுண்டாய் வெளி குப்பை மேடு தொடர்ச்சியாக எரியூட்டப்படுகின்றது. குறித்த பகுதி யாழ்ப்பாணம் – அராலி – வட்டுக்கோட்டை ஆகியவற்றின் பிரதான வீதியாகும்
இந்த வீதியை எமது பிரதேச மக்கள் கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். குறித்த வீதியிலுள்ள பகுதியிலேயே கல்லுண்டாய் குப்பை மேடு காணப்படுகின்றது. அங்கு தினமும் குப்பை மேடு எரியூட்டப்படுகின்றது. இதனால் அந்தப்பகுதி சுற்றாடல் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழலாக மாறியுள்ளது.
யாழ்.மாநகரசபைக்குச் சொந்தமான கல்லுண்டாய் குப்பைமேடு தொடர்பில் மாநகர சபைக்கு எமது கண்டனங்களை வெளியிடுகின்றோம்.
எனவே பிரதேச மக்களின் நலனை கருத்தில் கொண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் காலங்களில் இதனை தடுத்து நிறுத்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுப்புமாறு சபையிடம் தீர்மானத்தை முன்வைக்கின்றேன் .- என்றார்.