ஆபத்தான காட்டுக்குள் கசிப்பு உற்பத்தி – துணிச்சலாக முற்றுகையிட்ட கிராம சேவகர்கள்!

யாழ்.புங்குடுதீவு இறுப்பிட்டி ஜே/27 கிராமசேவகர் பிரிவிலுள்ள பற்றைக்காடு நிறைந்த பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை கிராமசேவகர்கள் இருவர் நேற்று (26) முற்றுகையிட்டனர். 

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தில் அன்ரன் பயஸ் விதுசன் எனும் நபர் ஒன்றரை லீற்றர் கசிப்பு போத்தலுடன் புங்குடுதீவு பிரதேச கிராம சேவகர்களான சிறீதரன் நிமால் மற்றும் பிரியலக்சன் ஆகியோரால் கடந்த 25 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பெறப்பட்ட  இறுப்பிட்டி காட்டுப் பகுதியில் காணப்பட்ட சட்டவிரோத கசிப்பு

உற்பத்தி நிலையம் இருப்பது தெரியவந்தது. 

அதனையடுத்து குறித்த பற்றைக் காட்டுக்குள் இரு கிராம சேவகர்களும் துணிச்சலாக சென்று சட்டவிரோத கசிப்பு நிலையத்தினை  முற்றுகையிட்டனர். பின்னர் இது தொடர்பில் குறிகாட்டுவான் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். எனினும் வாகனம் இல்லாததால் 50 நிமிடங்களுக்குப் பின்னரே பொலிஸார் அவ்விடத்தை சென்றடைந்தனர். 

முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையத்தில் 180 லீற்றர் கொள்ளளவு உடைய கோடா பரல்களை மீட்ட பொலிஸார் அதனை நிலத்தில் ஊற்றி அழித்தனர். 

அத்துடன் கிராம சேவகர்களால்  கைதுசெய்யப்பட்ட அன்ரன் பயஸ் விதுசன்  என்பவர்,  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆபத்தான குறித்த காட்டுக்குள் பயமின்றி சென்று கசிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு நபரையும் கைது செய்த கிராம சேவகர்கள் இருவரின் துணிச்சலான செயல் மிகவும் பாராட்டத்தக்கது என்று அவர்களுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *