மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை(30) இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதி வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து, கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சாரதியும் உதவியாளர்கள் இருவரும் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் பேருந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் , மோதிய மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.