ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  உட்பட  15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. 

ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கருவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். 

அதனையடுத்து வழக்கு விசாரணைகளை டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது. அத்துடன்  அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. 

2023 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார்  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *