யாழ். மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் வினைத்திறன் மிக்க வளமான சபையாக வேலணை பிரதேச சபையை மாற்றியமைக்க அமைந்துள்ள ஆட்சி அதிகார காலத்தை பயன்படுத்திக் கொள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்கள் பிரிவினைகள் இன்றி உழைக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் கன்னி அமர்வு தவிசாளர் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.
முன்பதாக வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் மக்கள் பிரதிநிதிகள் வங்களாவடி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளை தொடர்ந்து பிரதேச சபையின் உத்தியோகத்தர்களால் உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு சபைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வேலணை பிரதேச சபையின் செயலளர் பிரசன்னத்துடன் ஆரம்பமான முதலாவது சபை அமர்வில் உரையாற்றிய தவிசாளர் –
எமது வேலணை பிரதேச சபையானது மிகப் பின்தங்கிய ஒரு சபையாக இருக்கின்றது. அந்த நிலை இனியும் தொடரக் கூடாது என்பதே எமது அனைவரது நிலையாக இருக்கின்றது.
அதனடிப்படையில் எமது சபையை வருமானம் கூடிய சபையாக வினைத்திறன் மிக்கதாக பரிணமிக்கச் செய்வது அவசியமாகும்.
அதேபோன்று கடந்த சபையில் நாட்டின் காலத்தில் காலச் சூழலால் பொருளாதார நெருக்கடி போன்ற ஏதுக்களால் பல திட்டங்கள் தடைப்படுப் போயின.
அதனடிப்படையில் கடந்த காலத்தில் முன்னெடுக்காது இருந்த திட்டங்களை நாம் கட்சி பேதங்கள் இன்றி முன்னெடுப்பது அவசியம்.
அதேபோன்று ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்படுவதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கு பேதமின்றி ஆதரவுகள் இருக்க வேண்டும்.
அத்துடன் வங்களாவடி கடைத் தொகுதியின் மேற்றளத்தை கட்டுதல்,பொது விளையாடு மைதானம் அமைத்தல், அதை சிறந்த பொதிமுறையுடன் முன்னெடுத்துச் செல்லல், சோலைவருவாய் திட்டத்தை வேலணையின் அனைத்து கிராமங்களிலும் முன்னெடுத்தல், சுற்றுலா விவசாய நடவடிக்கைகளை விரிவாக்கல், வீதிச் சுற்று வட்டம் அமைத்தல், முக்கியஸ்தர்களின் நினைவு சிலைகள் அமைத்தல்,
வேலணை நுழைவாயில் வளைவு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து நிறைவுசெய்து கொள்ள இந்த ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கையுடன் முயற்சிக்கின்றேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் உறுப்பினர்களது அறிமுக உரை இடம்பெற்றது. இதன்போது உறுப்பினர்களால் கடந்த சபைகளில் முன்னெடுக்கப்பட்டதும், விடுபட்டதுமான திட்டங்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டி அவற்றை முன்னெடுப்பதில் இருந்த தவறுகள், அவற்றை முன்னெடுப்பதற்கன பொறிமுறைகள் குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
குறிப்பாக பிரதேச சபையின் உப சபைகளின் கட்டமைப்பும் வளப்படுத்தப்பட்டு மக்களுக்கான சேவைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் நயினாதீவில் திண்மக்கழிவு அகற்றலை பாரபட்சமற்ற வகையில் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் வீதி திருத்தப்படு போக்குவரத்து சேவை சீர்செய்யப்பட வேண்டும் எனவும் சுடிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதிக்கு இவ்வாண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுடிக்காட்டப்பட்டது.
மேலும் குறிப்பாக குடிநீர், கட்டாக்காலி கட்டுப்படுத்தல், திண்மக்கழிவகற்தல், சுகாதார மேம்பாடு, குறிகாட்டுவான் பயணிகள் போக்குவரத்து சீரமைப்பு, விவசாயம், வருவாயை அதிகரிக்க சந்தைகள் உள்ளிட வருமானமீட்டும் வழிமுறைகளை பயன்படுத்தல், உள்ளக வீதி சீரமைப்பு போன்றவற்றை குறிப்பிட்டு அவற்றுக்கான தீர்வுகளை வலியுறுத்தப்பட்டது . அறிமுக உரையின் பின்னர் நியதிக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.