கடற்கரைகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டிலுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் இன்று அதிகரித்துக் காணப்படும் என்பதால் மீனவர்களை கடற்றொழில் நடவடிக்கையில் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில  பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. 

மத்திய மலைப்பகுதியின்  மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். 

சிலாபம்- மன்னார் ஊடாக காங்கேசன்துறை,  மாத்தறை – ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்திலும் காற்று அதிகரிக்கும். 

சிலாபம் – கொழும்பு, காலி ஊடாக மாத்தறை , காங்கேசன்துறை – முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசும்.  

அத்துடன் புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 – 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெழும். ஆனால் இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

மழை மற்றும் அதிகரித்த காற்று என்பனவற்றால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துக்கொள்ள கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply