2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு நேற்று (7) ‘வீதி பாதுகாப்பு தினம்’ எனும் கருப்பொருளின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் சாய்ந்தமருது பொலிஸ் திணைக்களமும் இணைந்து விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்வில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வின் போது, சுகாதார உத்தியோகத்தர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து, அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள்,வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள்,வாகனம் ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்திய ஓட்டுனர்கள் போன்றவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கினர்.
இந்நிகழ்விற்கு குறுகிய காலத்தினுள் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்கியதற்காக, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியால், சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றியுடன் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.