அநுர அரசின் மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக இல்லை! பிரதான எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்ட மூலம் மின்சாரசபைக்கோ, அதன் ஊழியர்களுக்கோ அல்லது பாவனையாளர்களுக்கோ எந்த வகையிலும் நன்மை பயக்கக் கூடியதாக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய மின்சாரசபை சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்தது. 

தேசிய சொத்துக்களை பாதுகாக்கும் அதேவேளை, மின்சாரக் கட்டணத்தை குறைக்கக் கூடியவாறு குறித்த சட்டம் தயாரிக்கப்படும் என்று அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமூலம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தினால் கடுமையான திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

திருத்தப்பட்ட சட்ட மூலம் மின்சாரசபைக்கோ, அதன் ஊழியர்களுக்கோ அல்லது பாவனையாளர்களுக்கோ எந்த வகையிலும் நன்மை பயக்கக் கூடியதாக இல்லை. 

இது தொடர்பில் நாம் நீதிமன்றத்திலும், பாராளுமன்ற தெரிவுக்குழுக்களிலும் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

நாட்டில் எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் எழுத்திக் கொடுக்கவில்லை. 

பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு மாத்திரமே நாணய நிதியம் தெரிவித்துள்ளது.  நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *