இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆசியாவில் இலங்கை மாத்திரமே அமெரிக்காவுடன் தீர்வை வரி தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்திருந்தார்.
அது மாத்திரமின்றி இரு நாடுகளும் இணைந்து கூட்டு அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
15 சதவீத வரி குறைப்பை பெற்றுக் கொண்டு ஆடை தொழிற்துறையை பாதுகாக்க முடியும் என்றும் உறுதியளித்தனர்.ஆனால் இவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமை இலங்கையின் ஆடை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையச் செய்யும்.
44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் எம்மை விட குறைவான வரி வீதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமையால் அது அமெரிக்க ஏற்றுமதி சந்தையில் எமக்கு பாரிய சவாலாக அமையும்.
இவற்றுக்கு மத்தியில் இந்தியாவின் நிலைவரம் என்ன என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவுக்கு எந்தளவு வரி அறிவிக்கப்படவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.