மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து நேற்று விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
பிரதான சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில் பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்தி விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று இரவு 7 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையில் பாரிய சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன் போது தலைகவசம்அணியாது மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் சாரதி அனுமதிபத்திரம், வாகன மற்றும் மோட்டர் சைக்கிள்களின் பதிவு புத்தகங்கள் போன்ற ஆவணங்கள் இன்றி பயணித்தவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இதேவேளை திடீர் சோதனை நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் யூன் 30 ம் திகதி வரையிலான 6 மாதத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தடுப்பதற்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கு அமைய பிரதான சந்திகளில் உள்ள வீதியூடாக பயணிக்கும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .