மண்வெட்டிப் பிடியால் தாக்கியதில் இளைஞன் மருத்துவமனையில்; 11 பேர் தலைமறைவு – பொலிஸார் வலைவீச்சு!

வீதியால் சென்ற இளைஞனை வன்முறைக் கும்பல் இணைந்து  மண்வெட்டிப் பிடி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஜேர்மனிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார். அவர் தனது சகோதரி, சகோதரியின் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் முரண்பட்டுள்ளார். 

ஜேர்மனியிலிருந்து வந்த குறித்த நபர் தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதன்போது தன்னுடன் முரண்பட்ட சகோதரியின் கணவரது நண்பர் அவ்வழியே சென்றுள்ளார்.

அதனை அவதானித்த போதையில் இருந்த அந்த கும்பல், அந்த இளைஞரை வம்புக்கு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் பின்னர் அந்த இளைஞரை மண்வெட்டியின் பிடி மற்றும் கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். 

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரை அயலவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்ட 11 பேரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜேர்மனிலிருந்து வந்த நபர் மீண்டும் அந்நாட்டுக்கு  திரும்பிச் செல்ல முடியாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply