தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
நாடு முழுவதும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் மருந்து தெளிக்கும் செயற்பாடு இன்றைய தினம் உரும்பிராய் கமநல சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தென்னை பயிர் சேவை சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விவசாய திணைக்களத்தின் மருந்து தெளிக்கும் இயந்திரத்தின் உதவியுடன் தென்னை மரங்கள் காணப்படும் வீடுகளுக்கு குழுக்களாக செல்லும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையினர் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் அனைத்து தென்னை மரங்களுக்கும் மருந்து விசிறும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டனர்.
மருந்து விசிறும் நடவடிக்கையானது தென்னை பயிர்ச் செய்கையின் தலைவர் கலாநிதி சுனிமால் ஜெயக்கொடி, தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் வட பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் ஆகியோரின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே குறித்த மருந்து தெளிக்கும் வேலைத்திட்டத்தினை பொதுமக்கள் தமது அனைத்து தென்னைகளுக்கும் மேற்கொள்ள தென்னை பயிர்ச் செய்கை சபையுடன் இணைந்து செயற்படுமாறு தென்னை பயிர்ச் செய்கை சபையின் வடக்கு மாகாண முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளைய தினமும் மருந்து தெளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதால் பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குமாறும் தென்னை பயிர்ச் செய்கை சபை கேட்டுக்கொண்டது.