முடிந்தால் அமைச்சர்களான பிமல், வசந்தவை கைது செய்யுங்கள் – ஜனாதிபதிக்கு அரசியல்வாதிகள் சவால்

 

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளின் சாதனையை முறியடிக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடந்த மாதம் 2 ஆம் திகதி முறைப்பாடளித்தோம்.

ஆனால் இதுவரையில் அந்த முறைப்பாடு குறித்து எவ்வித விசாரணைகளையும் ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை.

பழைய திருடர்களை பிடிப்பதில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வேலைபழுவாக இருப்பதால் புதிய திருடர்களை ஆணைக்குழு அலட்சியம் செய்கிறது. 

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பணிப்புக்கு அமைவாகவே இந்த 323 கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டதாக சுங்கத்திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் சீவலி அருட்கொட குறிப்பிட்டார். 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறையாக செயற்படுமாயின் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

வீடு கொள்வனவு விவகாரத்தில் அமைச்சர்  வசந்த சமரசிங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவரை கைது செய்யுமாறு கல்கிசை நீதிமன்றம் கடந்த உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் இதுவரையில் அவர் கைது செய்யப்படவில்லை.  என்றார்.

இந்நிலையில் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் சீவலி அருட்கொட ஆகியோரை கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தகவலறியும் உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 

அந்த அறிக்கையில் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை முறையற்ற செயற்பாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறாயின் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் சீவலி அருட்கொட ஆகியோரை கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை விசாரிக்காமல், குற்றத்தை வெளிக்கொண்டு வந்தவர்களை விசாரிப்பது சட்டத்துக்கு முரணானது என்பதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *