வீடொன்றில் தீடீரென பற்றிய தீ; பொருட்கள் முற்றிலும் தீயில் கருகி நாசம்!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியிலுள்ள வீடொன்று தீடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியில் உள்ள வீடொன்றே இன்று (26) தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த பகுதியிலுள்ள வீடொன்று இன்று அதிகாலை 2.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது. 

வீட்டு உரிமையாளர் குவைட் நாட்டில் இருந்து நாடு திரும்பவுள்ள நிலையில் அவரை அழைத்து வருவதற்காக தாய் மற்றும் இரு பிள்ளைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இரவு 10.30 மணிக்கு   வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

ஒரே காணிக்குள் உள்ள மற்றுமொரு வீட்டில் உரிமையாளரின் தாயும் இன்னொரு மகளும் தூங்கிய நிலையில் புகை எழ ஆரம்பித்ததை அவதானித்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். 

பின்னர் அருகிலுள்ள வீட்டாருக்கு தகவல் வழங்கி அவர்களுடன் இணைந்து திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு தீ விபத்து தொடர்பாக அறிவித்தனர். 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். 

எனினும் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி, குளிர் சாதனப் பெட்டி,  பல தளபாடங்கள் என   பெறுமதியான பொருட்கள் தீயில் கருகி முற்றாக நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இலங்கை மின்சார சபையினர்  மின்சாரம் தொடர்பில் பரிசோதித்துள்ளனர். 

இது மின் கசிவா அல்லது திட்டமிடப்பட்ட சதியா ? என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply