நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பில் 1,182 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (26) முழுவதும் மேலும் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  

இந்த நடவடிக்கைக்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து கொண்டுள்ளன.  

சோதனை நடவடிக்கையின் போது, 24,343 பேர் சோதனை செய்யப்பட்டனர். 

மேலும் 7,396 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 9,727 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  

அதன்படி, இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுக்காக 1,182 பேர் கைது செய்யப்பட்டனர். 

அத்தோடு 230 கிராம் 159 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 220 கிராம் 415 மில்லிகிராம் ஹெரோயின் உள்ளிட்ட ஏராளமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 410 பேரும் இந்த சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.  

இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 7,600இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.  

அத்தோடு, இந்த சோதனை நடவடிக்கையின் போது நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *