நாளை ஆரம்பமாகும் நல்லூரானின் மகோற்வசம்;கொடிச்சீலை இன்று கையளிப்பு – ஏற்பாடுகள் பூர்த்தி!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 

கொடியேற்றத்திற்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன்படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து. 

அதன்பின்னர் கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது. நல்லூர் ஆலய மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள்  இடம்பெறும்.

மகோற்சவத்தின்  10 ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும், மாம்பழ திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதியும் ,  தேர் திருவிழா  21ஆம் திகதியும் , மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது. 

நல்லூரானின் மகோற்சவத்தைக் காண நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் திரண்டு வருவது வழக்கம். அதற்கமைய மகோற்சவத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply