முல்லையில் காணாமல் போன மீனவர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம்; மீனவ மக்கள் சந்தேகம் ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு!

முல்லைத்தீவு – தீர்த்தக்கரைப் பகுதியிலிருந்து கடந்த ஜூன் மாதம் காணாமல் போன மீனவர், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களால் திட்டமிட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கலாம் என்று  மீனவ மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவில் கடந்த 2025.06.19 அதிகாலை 02.30மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வின்சன்ரிப்போல் அன்ரனிகர்னல் என்பவரைக் காணவில்லை. 

தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கே கடலுக்குச் சென்றுள்ளார். அவர் கடலுக்குச்சென்ற படகு மீட்கப்பட்டபோது அதில் இரத்தக்கறை இருந்துள்ளதுடன், படகிலும், படகின் வெளியிணைப்பு இயந்திரத்திலும் சிறிய அளவில் சேதமடைந்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன. 

படகில் இனங்காணப்பட்ட இரத்தக்கறையானது மனிதனுடையதென தடையவியல் நிபுணர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் காணாமல் போன குறித்த மீனவர் கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களால் தாக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மீனவ மக்களிடமுள்ளது.

முல்லைத்தீவுக் கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கைகளிலேயே உள்ளது. இரவில் இடம்பெறும் வெளிச்சம்பாச்சி மீன்பிடித்தல் செயற்பாட்டால் கடல்முழுவதும் பகல்போல் தென்படுகின்றது. 

இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளநிலையில், அந்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டியவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடற்படையினர், பொலிஸார், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரால் ஏன் இத்தகைய சட்டவிரோத செயற்பாட்டைக் கட்டுப்படுத்தமுடியவில்லை எனவும் கேள்வியெழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *