மஸ்கெலியாவில் மாயமான மீனவர்; நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்பு!

மஸ்கெலியாப் பகுதியில் காணாமல் போன  மீனவர்  ஒருவர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து (வயது- 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த மீனவர் கடந்த புதன்கிழமை காலை 10.57 மணி முதல் வீட்டை விட்டு வெளியேறி சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

முறைப்பாட்டையடுத்து  மஸ்கெலியா பொலிஸார், மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர்  இணைந்து குறித்த மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ச்சியாக நேற்றுக் காலை முன்னெடுக்கப்பட்ட  தேடுதல் பணியில் மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் புரவுன்லோ கரையோர பகுதியில்  குறித்த மீனவர்  உடுத்தியிருந்த உடை, பாதணி  என்பன மீட்கப்பட்டன. 

அதனையடுத்து மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் மேற்கொண்ட தேடுதல் பணியில்  நேற்று வரை மீனவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று  மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார  விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு தலைமையக கடற்படை சுழியோடிகள் 8 பேருடன்  ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள்  மோப்பநாயுடன் குறித்த பகுதிக்கு இன்று சென்றனர். 

அதிகாரிகள் இணைந்து பல மணி நேரம் மேற்கொண்ட தேடுதல் பணியில் புரவுன்லோ வட்டாரத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து குறித்த மீனவரின் சடலத்தை மீட்டனர்.

சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *