ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..!

பீகாரைச்  சேர்ந்த பிரபல  ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர்  தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை  அமைத்து குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து, போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர்.

இந்நிலையில் வடமாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும்  சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன்  தினத்தன்று,  ஆசிரியர் கானிடம் படித்த சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டியுள்ளனர்.

மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதேவேளை ராக்கி குறித்து உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு பேசிய ஆசிரியர் கான், தனது மணிக்கட்டில் 15,000-க்கும் மேற்பட்ட ராக்கிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் இதன் எடை காரணமான கையை கூட உயர்த்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply