ஹர்த்தால் நிலவரம் தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, வர்த்தக சங்கத்தின் போசகரும், ரெலோ கட்சியின் முக்கியஸ்தருமான செ.மயூரன் அவ்விடத்தில் வருகை தந்து கருத்துக் கூறிய போது தலைவருக்கும், போசகருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த வர்த்தக சங்க தலைவர்,
போசகர் தேர்தலில் படு தோல்வி அடைந்தவர். அவர் தற்போது கூறுவது எந்த நியாயமும் இல்லை. சுமந்திரனை பின்கதவால் வர்த்தக சங்த்திற்கு கூட்டி வந்தது இவர் தான்.
அது தான் உண்மை. சுயமாக இந்த வர்த்தக சங்கம் செயற்படும். எமது வர்த்தக சங்க போசகர் என்ற மனநிலையில் இருந்து பேச சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.
வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு பெரிய படை பலத்துடன் வந்து வர்த்தகர்களை அச்சுறுத்தும் பாணியில் சுமந்திரன் செயற்பட்டதாகவும் கர்த்தால் செய்வதாக இருந்தால் சுமந்திரனை இங்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடச் சொல்லுங்கள் எனவும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த போசகர் செ.மயூரன்,
நாங்கள் ஹர்த்தாலுக்கு அறிக்கை விட்டுள்ளோம். சுமந்திரனை நான் தான் வர்த்தக சஙகத்திற்கு கூட்டி வந்தேன். ஊடக அறிக்கை விடுமாறு எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.
ஒரு கட்சியின் பின்னனியில் இயங்குபவரே தலைவர். தன்னிசையாக தீர்மானம் எடுக்க முடியாது. இது வர்த்தக சங்கம் என்பது நகரத்திற்குள் உள்ள ஒரு சங்கமே தவிர வவுனியாவுக்கானது அல்ல.
நெடுங்கேணி, செட்டிகுளம், பூந்தோட்டம், நெளுக்குளம் என வர்த்தக சங்கங்கள் இருக்கும் போது இது வவுனியா வர்த்தக சங்கம் என எப்படி பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.