மஹிந்தவின் ஆட்சியில் நாட்டை விட்டு ஓடி தலைமறைவான பாதாள குழு தலைவர்கள்! சாகர பெருமிதம்

ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் பாதாள குழு தலைவர்கள் நாட்டை விட்டு ஓடி தலைமறைவானார்கள்.

பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை கடந்த அரசாங்கங்கள் எடுக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பாதாள குழுக்களை பாதுகாத்தது. அதன் விளைவை இன்று நாடு எதிர்கொள்கிறது.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன. பொலிஸாரின் முன்பாக துப்பாக்கிதாரிகள் தமது இலக்கினை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

பொதுமக்களின் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். என்றார்.

Leave a Reply