ரணிலின் செயலாளரும் கைதாக வாய்ப்பு – விசாரணைகள் முன்னெடுப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை மற்றும் அதன் விசாரணைகள் தொடர்பில் இன்று (23)நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

அப்போது, குறித்த சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்பட உள்ளாரா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 

விசாரணைகள் நடைபெற்று வருவதால், இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று இதன்போது கலிங்க ஜயசிங்க தெரிவித்தார். 

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply