ரணிலின் உடல் நிலையில் மாற்றம்; நாளை நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா? சிறையில் காலத்தை செலவிட வேண்டிய நிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளாக கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க,

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிறப்பு வைத்தியர்கள் முன்னாள் ஜனாதிபதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், 

தற்போது அவரது உடல்நிலை திருப்திகரமான நிலையில் இருந்தாலும், திடீரென அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர் கூறினார்.

இருப்பினும், இன்று பிற்பகல் நடைபெறும் வைத்தியர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு, நாளை நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று வைத்தியர் பிரதீப் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக போராட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கயை முன்வைத்துள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள்  கூறுகின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த அரசியல்வாதிகள் அவரை சந்தித்தபோது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்தோடு  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பேரணி நடத்தப்பட்டால் அது  நாட்டின் நீதித்துறைக்கு எதிரானது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் யாரவது நடந்துகொண்டால் சட்டம் அதற்கேற்ற நடவடிக்கையை எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேனும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டால் நீதிமன்றம் அது தொடர்பில் விசாரித்து தேவை இருந்தால் அவருக்கு பிணை வழங்கும்.

இல்லையேல், அவர் சிறையில் தனது காலத்தை செலவிட வேண்டியிருக்கும். அதுதான் சட்டத்தின் வழி என தெரிவித்தார்.

Leave a Reply