திருடன் என நினைத்து கொடூரமாக தாக்கிய மக்கள்; வீடியோ வைரலானதால் மனமுடைந்து உயிரை மாய்த்த தமிழ் இளைஞன்

 கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறான இடத்தில் இறங்கியதால் கிராம மக்கள், திருடன் என்று நினைத்து அடித்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ரொச்சில்ட்  தோட்டத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமாகாத ராமச்சந்திரன் புவனேஸ்வரன் முரளி என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுமுறை கிடைத்தவுடன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க  வீட்டிற்கு வருவதை குறித்த இளைஞன் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த, 6 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து வந்த அவர் பேருந்தில் தூங்கிய நிலையில் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து வெகுதூரம் சென்றுள்ளார்.

நுவரெலியா செல்லும் வழியில் ரம்பொடையில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். ​​அதிகாலை 2 மணி என்பதால் வீட்டிற்கு செல்ல பேருந்து இல்லாமையினால் அந்தப் பகுதியிலுள்ள தனது தாயின் சகோதரியின் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.

இரவில் வழியை மறந்துவிட்டு, வேறு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.  எனினும் திருடன் என நினைத்த குடியிருப்பாளர்கள் கூச்சலிட்டபோது, ​​அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வந்து அந்த இளைஞனை தாக்கியுள்ளனர்.

பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. 

விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply