யாழ்.பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது; சயனைட் நாவல் அறிமுக நிகழ்வில் எழுத்தாளர் தீபச்செல்வன் பெருமிதம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது.  நான் இன்று படைப்பாளியாக மாறி எழுதுகிறேன் என்றால் அதற்கு பல்கலைக்கழக நூலகமே காரணம். இவ்வாறு எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். 

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் அறிமுக விழா  நேற்று (11) பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நாவல் அறிமுகம் செய்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 

அன்றைய போர்க்கால பல்கலைக்கழக சூழலும், எங்களைச் சுற்றியிருந்த போராட்டங்களுமே என்னை செழுமையாக்கியது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாக, மாணவத் தலைவர்களாக உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. 

பல்கலைக்கழக படிப்பு முடிந்த பின்பு எங்காவது அரச திணைக்களம் ஒன்றிற்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக வேலைக்கு போகிறோம், கையொப்பத்தை இடுகிறோம். வேலையோடு முடங்கிப் போகிற வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்களாக நீங்கள் வந்துவிடக் கூடாது என்பது எனது அழுத்தமான கோரிக்கை.  

வெறுமனே முன்னாள் போராளியின் வாழ்க்கைப் போராட்டம் சார்ந்த கதையை உங்கள் கைகளில் தரவில்லை. இந்தக் கதையின் வாயிலாக நீங்கள் இந்த தேசத்தில் ஆற்ற வேண்டிய சேவையினுடைய கோரிக்கைக்கான விண்ணப்பத்தைத் தான் உங்களுடைய கைகளில் தந்திருக்கிறேன். 

2009 இல் எமது இனத்தை பெருமளவுக்கு இனப்படுகொலை செய்து எங்களுடைய சமூகத்தை ஊமைகளாக்கி விட்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு எங்களுடைய சமூகம் இயல்பாகவே ஊமைகளாகி ஆகக்குறைந்த மனிதப் பண்பும் இல்லாத சமூகமாக நாங்கள் மாறிக் கொண்டிருக்கின்றோம்.  

ஆயிரமாயிரம் எங்கள் வீரமறவர்களை  மண்ணுக்குள் புதைத்திருக்கிறோம். அதற்காகவே எங்களுடைய அண்ணன்களும் அக்காக்களும் சயனைட்டுகளை தங்கள் கழுத்துகளில் கட்டிக் கொண்டார்கள். அப்படிக் கட்டிக் கொண்ட ஒரு மாவீரனின் கதையே இது. அப்படிக் கட்டிக் கொண்டவர்கள் இன்று நடைபிணங்களாக, பிச்சைக்காரர்களாக, கைவிடப்பட்ட மனிதர்களாக அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

நான் இந்தப் பல்கலைக்கழக நூலகத்திலே அதிக நேரங்களை செலவிட்டிருக்கிறேன். நான் இன்று படைப்பாளியாக மாறி எழுதுகிறேன் என்றால் அதற்கு பல்கலைக்கழக நூலகமே காரணம். கைலாசபதி அரங்கில் தான் நான் மேடைப் பேச்சு பழகினேன். 

அந்த மகத்துவம் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது.   ஒவ்வொரு முறையும் இந்தப் பல்கலைக்கழகத்த்துக்குள் காலடி எடுத்து வைக்கும் போது இதயமெல்லாம் ஈரமாகுவதனை உணர்ந்திருக்கிறேன் – என்றார்.

Leave a Reply